செங்கல்பட்டு-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்
செங்கல்பட்டு-விழுப்புரம் இடையிலான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியானது வரும் மார்ச் மாதம் நிறைவடையும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
குடியரசு தின விழா
இந்தியாவின் 66-வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று காலை தேசிய கொடியை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஏற்றினார். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின்...
more... அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு விழாவின் போது ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது:-
மார்ச் மாதம் முடிவடையும்
முக்கியமாக தென்னக மக்கள் மிகவும் எதிர்நோக்கி இருக்கும் செங்கல்பட்டு-விழுப்புரம் இடையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் இந்த வருடம் மார்ச் மாதம் நிறைவடையும். இது தென்னக மக்களுக்கான வரப்பிரசாதமாக அமையும். மேலும், சென்னை எண்ணூர்-அத்திப்பட்டு இடையே 4.3 கி.மீ. தூரத்தில் 4 வழிப்பாதை அமைக்கும் பணியும் இந்த வருடம் முடிவடையும். இதில் சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணியும் அடங்கும்.
மின்சார ரெயில் சேவை
திருவள்ளூர்-வேளச்சேரி இடையிலான நேரடி மின்சார ரெயில் போக்குவரத்து இந்தாண்டு அறிமுகமாகும். தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்படும். சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நேரந்தவறாமல் ரெயில்களை இயக்கும் வகையில் சென்னை கடற்கரையில் கூடுதலாக 1 நடைமேடை வரும் மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும். சென்னை சென்டிரல்-பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது வழித்தடங்களில் ரெயில் இயக்கம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
விருதுநகர்-திருநெல்வேலி மற்றும் விழுப்புரம்-காட்பாடி இடையே மின்சார ரெயில் இயக்கப்பணிகள் முடிவடைந்து விட்டன. தற்போது சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் ரெயில்கள் மின்சார வழித்தடத்திலேயே இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டு
சமீபத்தில் தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி விருது பெற்ற ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் எம்.ஜெயராமனை, தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா பாராட்டினார்.
இந்த விழாவில் தெற்கு ரெயில்வே மகளிர் அமைப்பு தலைவர் மஞ்சுளா மிஸ்ரா, தலைமை போக்குவரத்து மேலாளர் அனந்தராமன், நிதி ஆலோசகர் நரசிம்மராவ், சென்னை கோட்ட வணிக மேலாளர் ஜி.காயத்ரி, ஆர்.பி.எப். முதுநிலை கோட்ட அதிகாரி அஷ்ரப், உயரதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஐ.சி.எப்.
அதேபோல, சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.பிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஐ.சி.எப். பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.), ஐ.சி.எப். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஐ.சி.எப். பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.