புதிய ரெயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் மந்திரி சுரேஷ் பிரபு தகவல்
புதுடெல்லி,
ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மந்திரி சுரேஷ் பிரபு, புதிய ரெயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
புதிய ரெயில்கள்
பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரெயில்வே மந்திரி சுரேஷ்...
more... பிரபு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு எதையும் அவர் வெளியிடவில்லை.
தற்போது பல ரெயில் பாதைகளில் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்படுவதாலும், பல பாதைகள் புதுப்பிக்கப்படுவதாலும், வேகக்கட்டுப்பாடு இருப்பதாலும் கூடுதல் ரெயில்களை விடுவது தாமதப்படுவதாக மந்திரி சுரேஷ் பிரபு தனது உரையின் போது குறிப்பிட்டார். புதுப்பிக்கப்படும் ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே புதிய ரெயில்கள் பற்றி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அவர் வெளியிட்ட இதர முக்கிய அறிவிப்புகள் வருமாறு:–
*முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளை பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்த ஐந்து நிமிடத்தில் பெறுவதற்கு வசதியாக, ‘ஆபரேஷன் 5 மினிட்ஸ்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
*மாற்றுத்திறனாளிகள் ஒரு தடவை தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொண்டு, சலுகை கட்டண இ–டிக்கெட்டை பெறும் சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.
ஸ்மார்ட் போன்
*பல மொழிகளில் இ–டிக்கெட் வலைத்தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். பணம் திரும்பப் பெறும் வசதியை வங்கிகள் மூலமாகவே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
*தெற்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வே ஆகியவற்றின் புறநகர் பிரிவுகளில், ஸ்மார்ட் போன்களில் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளை பெறும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி, அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
*டெபிட் கார்டு மூலம் டிக்கெட்டுகளை வழங்கும் இயந்திரமும் அறிமுகப்படுத்தப்படும்.
உணவுக்கு முன்பதிவு
*ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இ–டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்கான உணவையும் முன்பதிவு செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படும்.
*ரெயில்களின் வருகை, புறப்பாடு குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கும் எஸ்.எம்.எஸ். சேவை அறிமுகப்படுத்தப்படும்.
பஸ், ரெயிலுக்கு ஒரே டிக்கெட்
*ஒரே டிக்கெட்டில் ரெயிலிலும், பஸ்சிலும் பயணம் செய்யும் வசதி, மேலும் பல ரெயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
*சில குறிப்பிட்ட ரெயில்களில், பொது வகுப்பு பெட்டிகள் அதிகரிக்கப்படும். மும்பை புறநகர் பிரிவில், ‘குளுகுளு’ மின்சார ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
*பெரிய மெட்ரோ நகர்களுக்கிடையே இயக்கப்படும் ரெயில்களின் வேகம், மணிக்கு 200 கி.மீ.வரை அதிகரிக்கப்படும். அதற்கேற்ப தண்டவாளம் தரம் உயர்த்தப்படும். இதனால், டெல்லி–மும்பை, டெல்லி–கொல்கத்தா இடையே ஒரே இரவில் சென்றடையலாம். சரக்கு ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்படும்.
புல்லட் ரெயில்
*மும்பை–ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் இயக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். வைர நாற்கர பாதையின் வேறு வழித்தடத்தில் புல்லட் ரெயில்களை இயக்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.
*ரெயில்வேயில் புதுமைகளை புகுத்துவதற்காக ‘காயகல்ப்’ என்ற கவுன்சில் அமைக்கப்படும்.
*ரெயில் பாதுகாப்பு எச்சரிக்கை கருவியும், ரெயில்கள் மோதுவதை தவிர்க்கும் கருவியும் சில குறிப்பிட்ட பாதைகளில் விரைவில் பொருத்தப்படும். ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்படும்.