கட்டண உயர்வு இல்லை, பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே பட்ஜெட்டுக்கு பயணிகள் வரவேற்பு
மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இல்லாதது, பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற திட்டங்களுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரெயில்வே பட்ஜெட்
மத்திய ரெயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்பு இன்றி, மக்கள் வரவேற்கும் பட்ஜெட்டாக அமைந்தது. இருந்தாலும் இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் பற்றிய...
more... அறிவிப்பு எதுவும் இடம் பெறவில்லை.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளாக ரெயில் கட்டண உயர்வு இல்லை, பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா, முன்பதிவு செய்வதற்கான கால நீட்டிப்பு, ரெயில் பெட்டிகள் சீரமைப்பு போன்ற அறிவிப்புக்கு ரெயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரெயில் நிலையங்களில்...
ரெயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதே நேரத்தில் சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வறையில் இருந்த டி.வி.களில் ரெயில்வே பட்ஜெட் ஒளிபரப்பை பார்த்தனர்.
புறப்பட தயாராக இருந்த ரெயில்களில் அமர்ந்திருந்த பயணிகளில் பலர் தங்களது செல்போன்களில் பட்ஜெட் குறித்த தகவல்களை பார்த்துக்கொண்டிருந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.
பெண் அதிகாரி
மத்திய ரெயில்வே பட்ஜெட் குறித்து சூரிய சக்தி மின்சார சாதன நிறுவன உயர் அதிகாரியான ராமலட்சுமி ரவிசங்கர் கூறியதாவது:-
பட்ஜெட்டில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல், நிறைவேற்ற முடியாத அறிவிப்புகள் இல்லாமல், பயணிகள் வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்துள்ள ஒரு நவீன பட்ஜெட்டாகும். ரெயில்வேயை நவீனப்படுத்துவதற்கான, பாதுகாப்பான பயணத்துக்கான அடிக்கல் நாட்டும் பட்ஜெட் இது.
எங்களைபோன்ற குடும்பத்தினர் தொலைதூர பயணத்துக்கு ரெயில் பயணத்தையே பெரிதும் விரும்புகிறோம். 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது திட்டமிட்டு பயணம் செய்பவர்களுக்கு பெரும் பயன் விளைவிக்கும். துணை ரெயில் டெர்மினல்களை அமைக்கும் திட்டத்தில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள ராயபுரம் முனையத்தை இப்போது வெளியிட்டுள்ள துணை டெர்மினல்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்.
பயணிகள் வசதிகளுக்காக குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்கான அறிவிப்புகள் அனைத்தும் வரவேற்கத்தக்கதாகும். நிச்சயமாக ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பாராட்டப்படவேண்டியவர்.
கல்லூரி மாணவி
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி விஜயசாந்தி (வயது 22) கூறியதாவது:-
மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க விஷயங்கள் நிறைய உள்ளது. குறிப்பாக பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு குறித்த தகவலுக்கு புதிய எண் அறிவிக்கப்பட்டு இருப்பது, ரெயில் கட்டணம் உயராது என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. திட்டங்களை அறிவித்ததுடன் இல்லாமல் பெண்கள் பாதுகாப்பு குறித்து தகுந்த விழிப்புணர்வை ரெயில்வே நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் திட்டத்தின் பலன் மக்களுக்கு சென்றடையும். முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் பெறுவதற்கான ஸ்மார்ட்கார்டு திட்டம் வரவேற்கத்தக்கது.
குடும்ப தலைவி
ஒடிசாவை சேர்ந்த சபிதா (குடும்ப தலைவி) கூறும்போது, ‘நான் குடும்பத்துடன் அரக்கோணத்தில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் ஒடிசா. சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு ரெயிலில் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக ரெயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முனைப்பாக அவர்கள் செயல்படுத்தினால், என்போன்ற பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். பயம் இருக்காது’ என்றார்.
பெங்களூரை சேர்ந்த தம்பதிகள் சின்னையா-பிரேமா ஆகியோர் கூறியதாவது:-
மூத்த குடிமக்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. முன்பதிவு நாட்களை 120 நாட்களாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதனை ரெயில்வேதுறை கண்காணிக்க வேண்டும். இதனை புரோக்கர்கள் யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்ற அறிவிப்பு நல்லது என்றாலும், பெண்களின் சுதந்திரத்தில், தனி உரிமை பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
தனபால் (மாற்றுத்திறனாளி):- ‘மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதுமே ரெயில்வே நிர்வாகம் சரியான வசதிகளை செய்து கொடுப்பதில்லை. ஏற்கனவே எங்களுக்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் பெட்டியையும் மற்ற பயணிகள் ஆக்கிரமித்து கொள்கிறார்கள். எங்களுடன் வேறு நபர்கள் வரவில்லை என்றால், கட்டண சலுகையை தர மறுக்கிறார்கள்’ என்றார்.
துரைபாக்கம் பார்த்திபன் (மாற்றுத்திறனாளி) கூறும்போது, ‘‘பார்வையற்றவர்களின் வசதிக்காக ரெயில்களில் பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் பிரெய்லி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்து இருப்பது நல்ல விஷயம். இருந்தாலும், எங்களுக்கு வசதியாக மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு அருகிலேயே முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும்’’ என்றார்.